உலகின் சிறந்த 50 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஏசியன் பாங்கர் சஞ்சிகையினால் வெளியிடப்பட்ட புதிய தரப்படுத்தல் சுட்டெண்ணில் அமானா வங்கியும் உள்வாங்கப்பட்டுள்ளதனூடாக, வட்டி சாராத வங்கியியல் மாதிரியில் முன்னணி செயற்பாட்டாளராக தனது நிலையை மேலும் உறுதி செய்துள்ளது.
ஐந்தொகையின் உறுதித் தன்மையை பொறுத்து உறுதியான இஸ்லாமிய வங்கிகளை தரப்படுத்தும் ஏசியன் பாங்கர், நிதியியல் நிலை மற்றும் வினைத்திறன் ஆகியவற்றின் ஆறு பிரிவுகளை உள்வாங்கி பரிபூரண மற்றும் கடுமையான மதிப்பாய்வுகளை ஏசியன் பாங்கர் மேற்கொண்டிருந்தது. இதில் அளவிடக்கூடிய ஆற்றல், ஐந்தொகை வளர்ச்சி, இடர் கோவை, இலாபகரத்தன்மை, சொத்தின் தரம் மற்றும் திரள்வு தன்மை ஆகியன அடங்கியுள்ளன. மதிப்பாய்வுக்கு பயன்படுத்தப்பட்ட சில முக்கிய குறிகாட்டிகளில் மொத்த சொத்துகள், முற்பணம் மற்றும் வைப்புகளில் வருடாந்த அதிகரிப்பு, வைப்புக்கான முற்பண விகிதம், மூலதன போதுமை, தொழிற்படு இலாபத்தில் வருடாந்த வளர்ச்சி, சொத்துக்கள் மீதான வருமதி, வருமானத்துக்கான செலவு விகிதம், தொழிற்படா முற்பண விகிதம் மற்றும் CASA விகிதம் போன்றன பிரதான குறிகாட்டிகளில் அடங்கியுள்ளன.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த சாதனை தொடர்பில் அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டில் முதற் தடவையாக சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் தரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஒரு வருட காலப்பகுதியினுல் சிறந்த 50 நிறுவனங்கள் வரிசையில் உள்வாங்கப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இதனூடாக பெருமளவு முன்னேற்றம் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த முன்னணி இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் சிறந்த 50 நிறுவனங்கள் வரிசையில் எம்மையும் உள்வாங்க முடிந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இது வங்கிக்கு சிறந்த ஊக்குவிப்பாக அமைந்துள்ளது. எமது அர்ப்பணிப்பான ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பங்காளர்கள் மற்றும் இதர பங்குதாரர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். இறைவன் அருளால், எதிர்காலத்தில் அமானா வங்கி மேலும் உயர்ந்த ஸ்தானத்தை எய்துவதற்கு தயாராகவுள்ளது.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2021 செப்டெம்பர் மாதத்தில் ஃபிட்ச் ரேட்டிங் ஸ்ரீ லங்காவினால் BB+ (lka) உறுதியான தோற்றப்பாட்டை கொண்டுள்ளதாக தரப்படுத்தியிருந்தது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.