அமானா வங்கி ஐந்து புதிய ATM இயந்திரங்களை அண்மையில் நிறுவியுள்ளது. ராஜகிரிய, வத்தளை, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சுய வங்கிச் சேவை நிலையங்களில் இந்த புதிய ATM இயந்திரங்களை வங்கி அறிமுகம் செய்துள்ளது. அமானா வங்கியின் சுய வங்கிச் சேவை நிலையங்களில் பண மீளப்பெறுகைகளுக்கு மேலதிகமாக, பண வைப்பு மற்றும் காசோலை வைப்பு ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.
நாடு முழுவதிலும் 33 சகல வசதிகளையும் கொண்ட கிளைகளை அமானா வங்கி தன்வசம் கொண்டுள்ளது. கொம்பனித் தெரு, மாளிகாவத்தை, மட்டக்குளி, களுபோவில, ஹில் வீதி தெஹிவளை, ராஜகிரிய, கொலன்னாவ, இரத்மலானை, வத்தளை, களுத்துறை, தர்காநகர், மல்வானை, திஹாரிய, புளிச்சங்குளம், சியம்பலாகஸ்கொட்டுவ, ஹெம்மாத்தகம, மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர் மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளில் 20 சுய வங்கிச் சேவை நிலையங்களைக் கொண்டுள்ளது. LankaPay வலையமைப்பினூடாக நாடு முழுவதிலும் 5400 க்கு அதிகமான ATM இயந்திரங்களை பயன்படுத்தும் வசதியை அமானா வங்கி வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளனர்.
புதிய ஐந்து ATM கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த சுய வங்கிச் சேவை நிலையங்களை ஆரம்பத்தில் பண வைப்புகள் மேற்கொள்வதற்காக மாத்திரம் அறிமுகம் செய்திருந்த நிலையில், எமது மக்களுக்கு நட்பான சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் இந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவு நாட்டம் காண்பிப்பதை நாம் அவதானித்திருந்தோம். அதன் காரணமாக, தற்போது இந்த ATM களை நிறுவியுள்ளதனூடாக அவர்களுக்கு இலகுவான முறையில் பண மீளப் பெறுகைகளை மேற்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 50 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.